Wednesday, March 28, 2018

பேச்சுத் துணைகள்...! (Talk to God)

பேச்சுத் துணைகள்...!

அழகிய உரையாடலது
சுவாரஸ்யம் குன்றாமல் நீண்டது...
காதுகளை இடமாற்றியே
அழைப்புகளுடன் அசைபோட்டது...
கதைகளுமில்லை
கவிதையுமில்லை
துணுக்குகளுமில்லை
கிசுகிசுவுமில்லை
நேர அளவுகளின்றி நீண்டது..!

எதிர்காலமோ, நிகழ்காலமோ
சொந்தமோ, சொத்தோ
எதுக்குள்ளும் அடைபடாமல் நீண்டது..!

ஆரம்பமும் தெளிவில்லை
முடிவுரையில் இணக்கமில்லை
தொடரும் எனும் நிலைப்பாட்டில் நீண்டது..!

பதற்றப்பட அவசியமுமில்லை
கோபமாய் உரைக்க தேவையுமில்லை
கொஞ்சியும் வழியவில்லை
கெஞ்சியும் கூத்தாடவில்லை
நகைச்சுவைக்கு பஞ்சமில்லை
நாட்டுநடப்பு பற்றிய கவலையுமில்லை
அதிகாலைத்தொட்டே அமைதியாக நீண்டது..!

காலம் கடந்த உரையாடலது
கண்கள் முன்னே வந்துபோகிறது...
அடுக்கு வார்த்தைகள் கூடலின்றி
அமைதியான உரையாடலது - என்
எண்ணத்தின் ஓட்டத்திற்கேற்ப
நீண்டு கொண்டே போகிறது..!

எண்ணவியலா வார்த்தைகள்
அள்ளவியலா அன்புக்கள்
குறைவில்லா அழைப்புகளில்
எனக்காக நேரம் ஒதுக்கி
பேச்சுத் துணை அமைந்தது
அது யாருமில்லை...!!!
.
.
.
 இறைவனும் நானும் ஆலயத்தில்⛪
உயிர்ப்பு பெருவிழா ஆயத்தத்திற்காக🕊

-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...