Friday, September 26, 2014

நான் நாத்திகனா… இல்லை ஆத்திகனா…! - The LORD is One


நான் நாத்திகனா… இல்லை ஆத்திகனா…!

மனிதர்களின் ஒவ்வொரு அணுவும் அசைவதற்கு ஒரு காரணம் உண்டு. நமது வாழ்வின் ஒவ்வொரு முடிவுகளும், முடிந்தவைகளும் நம்முடைய உதவியின்றியே நடந்து கொண்டுவருகிறது. இன்று ஏழையாக வாழ்பவன் நாளை பணக்காரனாக மாறலாம். இன்று நிம்மதியாய் வாழ்பவன் நாளை நிம்மதியை இழந்து துன்புறலாம்.

இதற்க்கு காரணம் யார்?  நம்மை சுற்றி நடப்பது என்ன?
நம்மை சுற்றி ஏதேனும் சக்தி இருந்து நம்மை ஆட்டிப்படைகின்றதா?

அவர்தான் கடவுளா..! நான் ஏன் கடவுளை மதித்து நடக்கவேண்டும். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. நான் நல்லது செய்தால் சொர்க்கம் செல்வேன் அல்லது தீமை செய்தால் நரகம் செல்வேன் என்று எனக்கு எப்படி தெரியும்.

இந்த வாழும் உலகில் நமக்கு நாமே வரையறுத்த சட்டங்கள் நம்மை இந்த வாழும் உலகில் வழிநடத்தி செல்கின்றன. நன்மை செய்து வாழ்பவன் நிம்மதியோடும், துன்பங்கள் செய்பவர்கள் தண்டிக்கப்பட்டும், சிறைகளிலும் அடைக்கப்படுகிறார்கள். இதில் நடைமுறைகளுக்கு மாறாக நிகழ்வதும் உள்ளன. அவைகள் நமது வாழ்க்கையோடு முடிந்து விடுகின்றன. ஆனால் இந்த நிகழ்வு நான் இறந்த பிறகு நடப்பது உண்டோ..! சொர்க்கத்தை கண்டவர்கள், நரகத்தில் வேதனைப்படுபவர்கள் யாரையும் பார்த்தது உண்டா...! நமக்கு மறுவாழ்வு உண்டா..!

கடவுள் இருப்பது உண்மையென்றால், ஏன் எந்த ஒரு இறைவாக்கினர்களும், இறை தூதர்களும் என் சமூகத்தில் பிறக்கவில்லை. என்னுடைய சமூகம் அடிமைப்பட்டு, துன்பப்பட்டு பாவத்தில் மூழ்கிய பொது, ஏன் எந்த இறை தூதர்களும் எம்மக்களை காப்பாற்றவில்லை.
இஸ்ராயேல் மக்களிடம் அன்பு கொண்ட இறைவன் ஏன் மற்ற இன மக்கள் மீது அன்பு கொள்ளவில்லை. ஆதிகாலத்தில் மற்ற தேசங்களில் மக்களே இல்லையா. அப்படியானால் கடவுளின் பார்வையில் பாவிகளாய் தென்பட்டவர்கள் இஸ்ராயேல் மக்கள் மட்டும் தானா...!

நாங்கள் பல மன்னர் ஆட்சிகளில் மிதிபட்டு, ஆங்கிலேயரிடம் அடிபட்டு; கல், மண், காற்று என எங்களுக்கு உதவியவைகளை வணங்கும்போது, ஏன் கடவுள் எங்கள் முன்தோன்றி எங்களை வழிநடத்த முன்வரவில்லை. மீட்பின் கடவுள் இயேசு கூட மீண்டும்   இஸ்ராயேலில் தானே பிறந்தார். ஏன் மற்ற மனிதர்களின்மேல் இந்த ஓர வஞ்சனை. தன்னைப்போல் பிறரையும் நேசி என கூறும் கடவுள்கள், ஏன் மற்ற மக்களை நேசிக்கவில்லை. இஸ்ராயேலர்களிடம் பல புதுமைகள் செய்த கடவுள் ஏன் எம்மக்களின் துன்பம் துடைக்கவில்லை.
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதாலா...

இன்னும் எத்தனையோ சிந்தனைகள், எண்ணங்கள் நம்மிடம் மேலோங்கி காணப்படுகின்றன. ஏனெனில் நாம் மனித பிறவி.
நமக்குள் நாம் ஆத்திகனா இல்லை நாத்திகனா என ஆயிரம் கேள்விகள் தோன்றி மறைந்தாலும், நம்மிடம் அசைக்கமுடியாமல் ஒன்று நிலைபெற்று இருப்பது " நம்பிக்கை ". இதுதான் மனிதனை ஒருமைப்படுத்துவதும் மற்றும் இறைவனை நம்முடன் இணைப்பதும், நாம் பிறருக்காக வாழ பாலமாகவும் அமைகிறது.

நம் இறைவன் நமக்காக தோன்றவில்லை, நம்முடன் வாழவில்லை என எண்ணுபவருக்கும் இறைவன் ஒரு கட்டளையை முன் வைக்கிறார், அதுதான்  "நம்பிக்கை". என்னை கண்டு வணங்குபவனை விட, காணமல் வணங்குபவனே பேறுபெற்றோர். இதுதான் இறைவன் மனிதன் மீது கொண்ட நம்பிக்கை.

நாம் என்றாவது சிந்தித்து உண்டா... இறைவன் எப்படி என்னுள் வந்தார், அவரை எப்படி என் சமூகம் ஏற்று கொண்டது. இந்த மாபெரும் திருச்சபை எப்படி இஸ்ரயேலர் நடுவே பிறந்த இறைவனால் கட்டி எழுப்பப்பட்டது. அதுவே நாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கை. அவர்தான் மெய்யான மீட்பர் நம்மை பாவங்களிலிருந்தும், மூடனம்பிக்கைகளிளிருந்தும் மீட்டெடுத்துள்ளார். என உண்மையாக நம்புவதால் தான் இத்தனை பெரிய இறைச்சமூகம் உருவானது.

எனது எண்ணங்கள் செயல்கள் நாத்திகனாய் தோன்றினாலும், இறைமகன் இயேசு என் மனதுக்குள் குடியிருப்பதால் நான் இந்த நாகரீக உலகில் நாத்திகன் போர்வைப்போர்த்திய ஆத்திகனாய் வாழ்ந்து வருகிறேன்.
" கடைசியானோர் முதன்மையாவர்...
முதன்மையானோர் கடைசியாவர்
நாமும் முதன்மையாவோம் இறைவனை நம் வாழ்வில் முழு மனதோடு ஏற்று
ஜோ. பிரிட்டோ ராஜ்,
இராமனாதிச்சென் புதூர்,

Prisma Paints, Bahrain.

வாழ்ந்திட துடிக்கின்றேன் - Live for God



வாழ்ந்திட துடிக்கின்றேன்

எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர் – இன்னும்
எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்
இறுதிவரையிலும் மறந்து விடுவீரோ – என் வாழ்நாளில்
உன் தரிசனம் காணாமல் மறைந்து போவேனோ...!

மனித வாழ்க்கையே பாவங்களில் மூழ்கிபோகிறதோ
மீட்புப்பாதை சாவில் மட்டும் தான் தோன்றுகிறதோ...
நானும் உமது சாயல் தானே....
என் கண்நோக்கி பதில் தரமாட்டீரோ
என் விழிகளுக்கு ஒளியூட்ட மாட்டீரோ...

என் முழு இதயத்தோடு உம்மைப் புகழவில்லையோ – உம்
வியத்தகு செயலை அயலார்க்கும் பறைசாற்றவில்லையோ...
நானும் உமது பிள்ளை தானே...
நீர் என்னுடன் வருகையில் நான் மகிழ்ந்து ஆர்ப்பரித்தேனே
உமது உன்னதப்பெயரை போற்றி பாடினேனே..

எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிப்பெருவேனா
உம் வலதுப்பக்கத்தில் அமரும் தகுதி பெறுவேனா...
நான் நேர்மையில் நிலைத்திருந்து
உம் முகம்கண்டு நிறைவு பெறுவேனா...
ஜோ. பிரிட்டோ ராஜ்,
இராமனாதிச்சென்புதூர்,

Prisma Paints, Bahrain