Monday, February 25, 2019

அன்பின் தேவதை - Aroha Clabrin


அன்பின் தேவதை
அகிலம் காண வரவுள்ளாள்...
சூரியனுக்கு தூது சொல்லுங்க
சுட்டெரிக்கும் வெயிலை குறைக்க சொல்லி...
சந்திரனுக்கு தூது சொல்லுங்க
இதமா நாளும் இருக்க சொல்லி...!

இறைவனின் இனிய படைப்பு
இந்த மண்ணை காண வருகிறாள் - அவள்
புன்னகையை பார்க்க கோடி கண்கள் வேண்டும்
சினுங்கும் ஓசை கேட்க கோடி காதுகள் வேண்டும்
பூமியில் தன் பாதம் பதிக்க
இது புண்ணியம் செய்ய வேண்டும்...
இந்த உலகுக்கு நல்சேதி சொல்வாள் அதைக்கேட்கத்தான்
நமக்கு சில மாதங்கள் வேண்டும்...
குழந்தையாய் மகள் பிறக்க 
நல்ல பாக்கியமும் செய்ய வேண்டும்..!

கால் பருவ படிப்பு காத்திருக்கு
அரை பருவ உறவு காத்திருக்கு
முழு பருவ உழைப்பு காத்திருக்கு
இதையெல்லாம் தெரிந்துகொண்டு வருவாளா
தெரிய வைத்தால் இப்பூமிக்கே வருவாளா...!

முதல் பார்வையில்
இப்பூமியைக் கண்டு ரசிப்பாளா
மனிதர்களை பார்த்து சிரிப்பாளா – இல்லை
இதெல்லாம் வேண்டாமென அழுவாளா..!
மனித கோட்பாடுகளை அறிவாளா
மனித சட்டதிட்டங்களை மதிப்பாளா
ஆசைகளின் பிடியில் சிக்குவாளா
தேவைகளின் பிடியில் தவிப்பாளா

நான் எவ்வாறு கோபப்படுவேன்
அவள் தவறுகள் செய்யும்போது... 
நான் எவ்வாறு சந்தோசப்படுவேன்
அவள் கொஞ்சி விளையாடும்போது...
உலகை சுற்றி பார்க்க ஆசையில்லை
சந்திரனுக்கு போக வசதியுமில்லை – ஆனால்
உலகம் பெரியது என கற்றுகொடுப்பேன் - இதைத்தான் 
நீ கடைபிடிக்கவேண்டுமென திணிக்காமல் இருப்பேன்...
தாழ்த்தப்பட்டவர்கள் என யாரையும் கூறச்சொல்லமாட்டேன்
சாதிபேரை சொல்லி பிறரை சங்கடபடுத்த விடமாட்டேன்
மதவாதிகள் என மனிதம் மாறச்செய்யமாட்டேன்
அயலானுடன் எந்நாளும் நட்பாய் பழகச்சொல்வேன்...!

கையை இறுக பிடிக்க சொல்வேன்
கயமுயா என கத்தாமல் வரசொல்வேன் - அப்பாவின்
கழுத்தில் உப்புமூட்டை ஏறச்சொல்வேன்
அம்மாவை மட்டும் (செல்லமா) கடிக்க சொல்வேன்
சாலையை வேகமாக கடக்க சொல்வேன்
பெரியவர்களிடம் பணிவாக ஆசிர்வாதம் வாங்கசொல்வேன்
ஆசிரியரை மதித்து நடக்கச் சொல்வேன்
அன்போடு பிறரிடம் பழகச் சொல்வேன்...!

கண்டதை வாங்கி சாப்பிடமாட்டோம்
கடனைப் பற்றி யோசிக்கமாட்டோம்
கடைவீதியில் சண்டை போடமாட்டோம்
இதையெல்லாம் செய்யாமலிருக்கவும் தயங்கமாட்டோம்...!

தாயும் ஒரு குழந்தைதான்
சேயும் ஒரு குழந்தைதான்
இருவரின் சேட்டைக்கு பலிகடாவாகுவேனோ...
பத்து மாதங்கள் ஓடிவிட்டது...
காத்திருப்புக்கு பலனும் கிடைக்கப்போகிறது...
தேவதை மண்ணில் வரும் நேரம்
இப்பூமியே அழகாய் மாறப்போகிறது...
இறைவன் தூவிய அன்பின் விதை 
மண்ணில் காலூன்ற போகிறது..!
.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ் கிளாரா